உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் சேற்றில் சிக்கிய சரக்கு வேனால் போக்குவரத்து பாதிப்பு - தரமான சாலை அமைக்க கோரிக்கை
போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்து 2 பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து சரக்கு வேனை மீட்டனர்.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு வேன் ஆம்புலன்ஸ் செல்லும் மண் ரோட்டில் இருந்த சகதியில் சிக்கியது.
லேசாக சாய்ந்த நிலையில் இருந்த சரக்கு வேனை நகர்த்த முடியாமல் ஓட்டுனர் அவதிப்பட்டார். பின்னர் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்து 2 பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து சரக்கு வேனை மீட்டனர்.
இதையடுத்து சரக்கு வேன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:
பல்லடத்தில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆம்புலன்ஸ் செல்லும் ரோட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக அமைத்துத் தர வேண்டும், மண் ரோடாக இருப்பதால் மழை பெய்து சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
இதனால் அதில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்கள் ஏற்பட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வருகிறது. எனவே ஆம்புலன்ஸ் செல்லும் மண் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் தரமான ரோடு அமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.