உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-12-01 08:17 GMT   |   Update On 2021-12-01 08:17 GMT
தமிழகத்தில் பி.எம். கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

ரெனால்ட் நிசான் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 2 எண்ணிக்கையில் (1 கிலோ லிட்டர்) ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (புதன்கிழமை) திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் கொரோனா பேரிடரில் உதவ முன்வந்து உதவிகொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான உதவிகளை செய்ய உள்ளனர். ஏற்கனவே 1 கோடி ரூபாயை முதல்-அமைச்சரிடம் கொரோனா பேரிடர் நிதியாக வழங்கியிருக்கின்றனர்.

மீதமுள்ள 4 கோடி ரூபாயில் அண்ணாநகர், கலைஞர் நகர், தண்டையார் பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் தயாரிக்கும் பணிகளுக்கு செலவிட இருக்கின்றனர்.

இன்று அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 1 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் பணிகள் முடிவுற்று 2 எண்ணிக்கையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 100 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க முடியும். மற்ற மாவட்டங்களில் அந்தப் பணிகள் முடிவுற்றப் பிறகு அவைகள் திறந்து வைக்கப்படும்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்பு ஆக்சிஜன் உற்பத்தி என்பது 270 கிலோ லிட்டர் என்கிற அளவில் இருந்தது. மே7-க்கு பிறகு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 744.67 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பி.எம். கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது. சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பின் கீழ் 77 பி.எஸ்.ஏ. ஆலைகள் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் 61 பி.எஸ்.ஏ., ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரெயில்வே வாரிய மருத்துவமனைகளில் 4 பி.எஸ்.ஏ., ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. என்.எல்.சி. மருத்துவமனைகளில் 10 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டு, ஆக்சிஜன் வசதி என்பது மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் 11,651 என்ற அளவிலும் பிடைப் 12,457, டி டைப் 9,450 என்பது கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் வசதியை பொறுத்தஅளவில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது.

மே 6-க்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதை அனைவருமே நன்றாக அறிவார்கள். மிகப்பெரிய அளவில் பேரிடர் காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது. ஆனால் எதிர் காலத்தில் இந்த நிலை ஏற்படாத வண்ணம் முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளினால் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்ஸ் மற்றும் ஆக்சிஜன் ஆலைகள் தன்னிறைவு பெற்று இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மருத்துவக் கல்வி இயக்குனர் மரு.நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சாந்திமலர், அண்ணாநகர் புறநகர் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கனிஷேக் முகமது, ரெனால்ட் நிசான் பினுநாயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News