உள்ளூர் செய்திகள்
போடிப்பட்டி, தளி, நீலாப்பூரில் பயிர்க்கடன் பெற சிறப்பு முகாம்-விவசாயிகளுக்கு அழைப்பு
ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் உள்ள சங்கங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.650 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மற்றும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இணைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் உறுப்பினர்களாக சேர ஏதுவாக புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வட்டியில்லாப் பயிர்க்கடன், நபர் ஜாமீன் பெயரில் ரூ.1.60 லட்சம், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், சுய உதவிக்குழுக் கடன்கள், கறவை மாடுகள், கன்று வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் அனைத்து விதமான நீர்பாசனத்திற்கான கடன்கள் உடனடியாக வழங்கப்படும்.
இதில் ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் உள்ள சங்கங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போடிப்பட்டியில் நாளை 2-ந்தேதியும், தளியில் 3-ந் தேதியும், மேற்கு நீலாம்பூரில் 4-ந்தேதியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.650 கோடிபயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுகியகால வேளாண் உற்பத்திக் கடன்களை பெற நில உடமைச் சிட்டா, கிராம நிர்வாக அலுவலரின் சான்று அல்லது அடங்கல் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்துப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.