செய்திகள்
சுகாதாரமற்ற தள்ளுவண்டி கடைகளை கண்காணிக்க வேண்டுகோள்
கழிவுநீர் தேங்கியுள்ள சாக்கடை ஓரம் உணவு தயாரிக்கப்படுகிறது. குடிநீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மலிவு விலை ஓட்டல், இரவு நேர தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் பலகாரங்கள், இட்லி, தோசை, ஆப்பம் என பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர சிக்கன் வறுவல், மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் சில கடைகள் சுகாதாரமற்ற சூழலிலும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்படுகின்றன. கழிவுநீர் தேங்கியுள்ள சாக்கடை ஓரம் உணவு தயாரிக்கப்படுகிறது.
குடிநீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருப்பதில்லை. டெங்கு காய்ச்சலை தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் உடல் நலனை பாதிக்கும் இதுபோன்ற சுகாதாரமற்ற கடைகளையும் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:
நகரில் திடீர் திடீரென இரவு நேர கடைகள், தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. சுகாதாரமாக உணவு தயாரிப்பது, மாசற்ற தண்ணீர் வழங்குவது, உணவுக்கழிவை வெளியேற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இத்தகைய செயல்பாடுகளை கண்காணிக்கவும், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கவும் துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை அவசியமாகும் என்றனர்.