செய்திகள்
அகவிலைப்படியை வழங்க கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள சாக்குப்பைகளை விரைந்து எடுத்துச் செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் முருகன், துணை தலைவர்கள் கருப்புசாமி, ராமு, பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரேஷன் கடை பணியாளருக்கு புதிய சம்பளம் வழங்க இணை பதிவாளர் உத்தரவிட வேண்டும். தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்காத சங்கங்கள் விரைவில் வழங்க முன்வர வேண்டும். அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களில் ரேஷன் பணியாளருக்கு அறிவிக்கப்பட்டபடி ரேஷன் கார்டு ஒன்றுக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது.
அதனை விரைவில் வழங்க வேண்டும். மாவட்ட ‘வளர்மதி’ கூட்டுறவு சங்க ஊழியர்களின் பி.எப்., கணக்கில் 32 மாதங்களாக தொகை செலுத்தப்படாமல் இருக்கிறது. கடந்த 2019 ஜனவரி முதல் டிசம்பர் 2019 வரை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி 16 சதவீதத்தை வழங்க வேண்டும்.
அரசு அறிவித்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தில் வெளிமாநில தொழிலாளருக்கு பொருட்கள் வழங்க கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள சாக்குப்பைகளை விரைந்து எடுத்துச் செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.