செய்திகள்
திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம்
வகுப்பு ஆசிரியர்கள் பதிவேற்றும் பணியில் வருகிற 4-ந்தேதி வரை ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை எமிஸ் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் இதற்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் விபரம் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்படுகிறது.
புதிதாக பயிற்று மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. வகுப்பு ஆசிரியர்கள் இதற்கான பணியில் வருகிற 4-ந்தேதி வரை ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதிபடுத்துவர்.
இந்த பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்று அச்சிடப்படும். பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்பாட விலக்கு, செய்முறைத்தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள், விருப்ப மொழிப்பாடத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல், தேர்வு கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்தில் மேற்கொள்வது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.