செய்திகள்
மழையால் தக்காளி நடவுப்பணி தாமதம் - நாற்றுகள் கருகும் அபாயம்
தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் தக்காளி நடவுப்பணிகள் தள்ளிப்போவது விவசாயிகள்-பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
ஐப்பசி மாதம் தொடங்கியது முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. கார்த்திகை பட்டத்தில் நடவு செய்வதற்காக பல விவசாயிகள் தக்காளி நாற்றுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக தக்காளி நாற்றுகள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மழை மேலும் நீடித்தால் நாற்றுகள் கருகி விடும். எனவே கார்த்திகை பட்டத்தில் தக்காளி நடவு செய்வதில் தாமதம் ஏற்படும். இதனால் தை மாதத்தில் அறுவடையை எதிர்பார்த்து நடவு செய்ய திட்டமிட்டிருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
கார்த்திகை ஜோதி முடிந்ததும் அடை மழை முடிவுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. மழை மேலும் நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால் தக்காளி நடவு பணிகள் தள்ளிப்போகும் என்றனர்.
தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் தக்காளி நடவுப்பணிகள் தள்ளிப்போவது விவசாயிகள்-பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.