செய்திகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி கட்ட சிறப்பு முகாம்
நேற்றும் இன்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் இறுதி கட்ட பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்தல் முகாம் நடைபெற்றது.
திருப்பூர்:
நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இதையடுத்து மாவட்டம்தோறும் அதற்கான ஆயத்த பணிகள் நடந்துவருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. 8 தொகுதிகளில், 2,512 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இதில் 11 லட்சத்து 68 ஆயிரத்து 682 ஆண்கள், 11 லட்சத்து 97 ஆயிரத்து 236 பெண்கள்,293 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர்கள் உள்ளனர்.இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது.
நேற்றும் இன்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் இறுதி கட்ட பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்தல் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
www.nvsp.in என்கிற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்கிற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.