செய்திகள்
திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி குமாரசாமிநகரில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் தனியார் ஒருவர் போலி பத்திரம் தயாரித்து அந்த நிலம் தன்னுடையது என்றும், உடற்பயிற்சி கூடத்தை அகற்றுமாறும் தெரிவித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக நேற்றிரவு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் போயம்பாளையம் 4 ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் தாசில்தார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தனி நபர் வைத்திருக்கும் பத்திரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.