செய்திகள்
தாரமங்கலம் அருகே பள்ளிக்குள் புகுந்து 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கொத்தனார் கைது
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பள்ளிக்குள் புகுந்து 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி ஊராட்சியில் வனிச்சம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத அந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் நேற்று அதே பகுதியை சேர்ந்த கொத்தனர் பழனிசாமி (வயது 50) என்பவர் குடிபோதையில் வந்தார்.
பள்ளிக்கு வந்த பார்வை குறைபாடுள்ள 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்தார். இதனால் மாணவி சத்தம் போட்டார். பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் செல்வம் உள்பட ஆசிரியர்கள் போதையில் இருந்த பழனிசாமியை பள்ளியை விட்டு வெளியேற்றி விட்டு மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்து அவர்களுடன் மாணவியை அனுப்பினர்.
பின்னர் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்காத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தாரமங்கலம் போலீசில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருமை அறுமுகம் புகார் கூறினார்.
இது குறித்து ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.