செய்திகள்
தென் மாவட்டங்களில் விதை பயன்பாட்டுக்கெனவும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று அங்கு சில்லறை விற்பனை செய்கின்றனர்.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர், ஈரோடு மாவட்டம் நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவு நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலக்கடலை அறுவடை சீசன் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இருப்பினும் பெரிய விவசாயிகள் பலர் நிலக்கடலையை இருப்பு வைத்து சீசன் முடியும் தருவாயில் விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏலத்துக்கு எடுத்து வருகின்றனர். அதன்படி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்துக்கு எடுத்து வரப்படும் நிலக்கடலைக்கு அதிகபட்சம் கிலோவுக்கு ரூ.74 வரை விலை கிடைத்துள்ளது. ஆனால் சீசன் சமயத்தில் ரூ.68 வரை மட்டுமே விலை கிடைத்தது.
ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் கூறுகையில், தற்போது சீசன் முடிவுற்ற தருவாயில் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்திக்கு இந்த ஏல மையத்தில் இருந்து அதிகளவு நிலக்கடலை கொள்முதல் செய்யப்படுகிறது.
விளைச்சல் அதிகம் தருவதால் விருதுநகர், தென்காசி, அருப்புக்கோட்டை உட்பட தென் மாவட்டங்களில் விதை பயன்பாட்டுக்கெனவும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று அங்கு சில்லறை விற்பனை செய்கின்றனர் என்றனர்.