செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கழுகரை அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் இறைச்சிகளை மூட்டையாக கொண்டு வந்து சாலையில் வீசிச் செல்கின்றனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா கழுகரையிலிருந்து வேடபட்டி செல்லும் ரோடு, 2 கி.மீ., நீளமுடையது. இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இறைச்சிக் கழிவுகளை மூட்டையாக கொண்டு வந்து சாலையில் வீசிச்செல்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கழுகரை அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் இறைச்சிகளை மூட்டையாக கொண்டு வந்து சாலையில் வீசிச் செல்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை உண்ண வரும் நாய்கள் மூட்டைகளை கடித்துக்குதறுவதால் சாலை முழுக்க இறைச்சிக் கழிவுகள் பரவிக்கிடக்கிறது. இதற்காக சண்டையிடும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துக்கள் நடக்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதை கொட்டுபவர்கள் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.