செய்திகள்
மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கோரி 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்-ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனங்கள் அறிவிப்பு
கட்டண தொகையை வழங்க ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இழுத்தடிக்கின்றன. இதனால் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கிறது.
திருப்பூர்:
திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து 60 ரோட்டரி பிரிண்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. 5ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அனைத்து மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த ரோட்டரி பிரிண்டிங் துறையினர் முடீவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் அசோசியேஷன் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில்,
பைண்டர், பி.வி.ஏ., ஸ்கிரீன் கோட்டிங், விறகு உள்பட அனைத்து பிரிண்டிங் மூலப்பொருட்கள் விலையும் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
இதனால் ரோட்டரி பிரிண்டிங் உற்பத்தி செலவினமும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கட்டண தொகையை வழங்க ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இழுத்தடிக்கின்றன. இதனால் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கிறது.
பிரிண்டிங் மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ரோட்டரி பிரிண்டிங் கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை 30 நாட்களுக்குள் மற்றும் நிலுவையில் உள்ள கட்டண தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24, 25-ந்தேதி ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.