செய்திகள்
மாணவர்களின் மன நிலையை புரிந்து நேரடித்தேர்வு அமல் - இந்து முன்னணி அறிக்கை
தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர்:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தேர்வில் அரசு அவசரம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர்காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் ஆன்லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடச்சியாக தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் பள்ளி கல்வித்துறையும், உயர் கல்வித் துறையும் திடீரென பள்ளி, கல்லூரிகளில் நேரடித்தேர்வு முறை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவானது மாணவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நேரடித் தேர்வு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் அறிவிப்பதால் தேர்ச்சி விகிதம் மட்டுமில்லாமல் மாணவர்களின் எதிர் காலமும் பாதிக்கும்.
ஆகவே, மாணவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு படிப்படியாக நேரடித் தேர்வு முறையை அமல்படுத்துவதுடன், தேர்ச்சிக்கான மதிப்பெண் விகிதத்தையும் சற்று குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.