3 குழந்தைகளுக்கு தாயான நிலையில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொன்றேன்- என்ஜினீயர் வாக்குமூலம்
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை கொல்லப்பட்டறை பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கடலூர் மாவட்டம் அடரிகளத்தூர், காஞ்சிராங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரது மனைவி சிலம்பரசி (வயது 30) என்பதும், மேலும் கருப்பையா சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் சிலம்பரசி 2 மகன் மற்றும் மகளுடன் காஞ்சிராங்குளம் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் சிலம்பரசிக்கும், அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இளங்கோ (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். சம்பவத்தன்று ஆத்தூர் பகுதியில் உள்ள அந்த லாட்ஜிக்கு இளங்கோவுடன், சிலம்பரசியும் வந்து அறை எடுத்து தங்கினர்.
அப்போது சிலம்பரசியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு இளங்கோ தப்பியோடியது தெரிய வந்தது. இதையடுத்து சிலம்பரசியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திய போது அந்த செல்போனுக்கு இளங்கோ (22) அடிக்கடி பேசியதும் தெரிய வந்தது.
இளங்கோவை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- சிலம்பரசியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. எனக்கு திருமணம் ஆகாததால் அவருடன் நெருங்கி பழகி வந்தேன், இந்த நிலையில் 3 குழந்தைகளின் தாயான சிலம்பரசி என்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்தார்.
அதற்கு விருப்பம் இல்லாத நான் மறுப்பு தெரிவித்தேன், ஆனாலும் அவர் விடாமல் தொந்தரவு செய்ததால் ஆத்தூருக்கு அழைத்து வந்தேன், பின்னர் லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம், அப்போதும் திருமணம் செய்ய அவர் வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடினேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.