செய்திகள்
விபத்து

அறந்தாங்கியில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி டிக்கெட் பரிசோதகர் பலி

Published On 2021-11-18 15:04 GMT   |   Update On 2021-11-18 15:04 GMT
அறந்தாங்கி அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிக்கெட் பரிசோதகர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே உள்ள குன்னக்குரும்பியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் அறந்தாங்கி போக்குவரத்து பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். நாயக்கர்பட்டி என்ற இடத்தில் சென்ற போது சாலையின் நடுவே நின்ற மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியது. 

இதில் மூர்த்தி தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூர்த்திக்கு, அமுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News