வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலியுடன் தஞ்சம் அடைந்த வங்கி மேலாளர்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது24). இவர் சின்னாளபட்டியில் உள்ள தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் ஜமுனா (21). இவர் வடமதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இருவரும் உறவினர் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது பச்சமுத்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கமாக பெண் வீட்டார்தான் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் இங்கு பச்சமுத்துவின் குடும்பத்தினர் ஜமுனாவை ஏற்க மறுத்தனர். இதனால் பெண் வீட்டாருடன் காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம். பெற்றோர் தொந்தரவு செய்ய கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.