செய்திகள்
தீ விபத்து

மேலூரில் பழைய இரும்பு-பேப்பர் கடையில் தீ விபத்து

Published On 2021-11-16 10:37 GMT   |   Update On 2021-11-16 10:37 GMT
மேலூரில் பழைய இரும்பு, பேப்பர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:

மேலூர் பெரிய கடை வீதியில் பட்டாளம் கண்மாய் உள்ளது. இதனருகே பழைய இரும்பு சாமான்கள் மற்றும் பழைய பேப்பர்கள் வாங்கும் கடை உள்ளது.

இதன் உரிமையாளர் பாஸ்கரன் நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்று விட்டார். இன்று அதிகாலையில் பூட்டிய அவரது கடையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து பார்த்தபோது கடை உள்ளே தீ கொழுந்துவிட்டு எரிந்து எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் அருகில் உள்ள கடை, வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் 3 டன் அட்டை பெட்டிகள் மற்றும் பேப்பர்கள் எரிந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News