செய்திகள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை
சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
சென்னை:
வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்
ஒரு சில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய ஆரம்பித்தது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை விடிய விடிய பெய்தது.
கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
சென்னை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.