செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

Published On 2021-11-03 09:01 GMT   |   Update On 2021-11-03 09:01 GMT
பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
திருவள்ளுர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி 87 சதவீதம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 34 அடியாக உள்ளது. 2,817 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இதற்கிடையே ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

மேலும் பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நீர் வரத்து மேலும அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதையடுத்து இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஒதப்பை, தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வழியாக சென்று எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கலக்கிறது.

Tags:    

Similar News