செய்திகள்
தாராபுரத்தில் இன்று கட்டிட தூண் இடிந்து விழுந்து தொழிலாளி பலி-2 பேர் காயம்
தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் புனரமைப்பு பணி நடைபெற்றது. இப்பணியில் இன்று காலை கட்டிடத்தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கட்டிட தூண் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி தாராபுரம் குளத்தூர் புஞ்சை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்றொரு கட்டிட தொழிலாளியான பஜனைமட தெருவை சேர்ந்த ரங்கராஜ், கட்டிட பொறியாளர் பிரபு ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.