செய்திகள்
இரு தரப்பினரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

பல்லடம் அருகே கோவில் நிலத்தில் கம்பி வேலி அமைக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2021-10-31 08:02 GMT   |   Update On 2021-10-31 08:02 GMT
கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, சாமளாபுரம் வருவாய் துறை ஆய்வாளர் அனிதா ஆகியோர் 2 தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி காரணம்பேட்டையில் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. நேற்று இதன் அருகில் உள்ள நிலத்தில் சிலர் கம்பி வேலி அமைக்க முயன்றுள்ளனர்.அந்த இடமானது சூலூர் திருவேங்கடப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் கம்பி வேலி போடக்கூடாது என்றுஅந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, சாமளாபுரம் வருவாய் துறை ஆய்வாளர் அனிதா ஆகியோர் 2 தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் அரசு நில சர்வேயர் மூலம் உரிய பத்திர ஆவணங்களின்படி நிலம் சர்வே செய்து அதன் பின்னர் கம்பி வேலி போடுவது குறித்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுபற்றி பல்லடம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். இது சம்பந்தமாக காரணம்பேட்டை துளசிநாயக்கர் தோட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மாவட்ட கலெக்டருக்கு  அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோடங்கிபாளையம் ஊராட்சி காரணம்பேட்டையில் உள்ள நிலம் சூலூர் திருவேங்கடப்பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்டது. அதில் சிலர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வருகின்றனர்.

கம்பி வேலி அமைக்கவும் முயல்கின்றனர். இதனை நிறுத்தி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News