செய்திகள்
தீபாவளி பண்டிகையால் தக்காளி விலை உயர வாய்ப்பு
பயிர் வளர்ந்து பழங்கள் அறுவடை செய்யும் நிலைக்கு வந்த போது தக்காளியின் விலை மிகவும் சரிந்தது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகளின் விருப்பப்பயிராகவும், பராமரிப்பு குறைவான சாகுபடியாகவும் தக்காளி உள்ளது. பல ஏக்கர் பரப்பில் இரண்டு பருவங்களில் தக்காளி நடவு செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முழுமையான அமலில் இருந்த காலகட்டத்தில் தக்காளியின் விலை கிலோ ரூ.30 வரை விற்பனையானது. இதனால் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் தக்காளி சாகுபடி செய்தனர்.
பயிர் வளர்ந்து பழங்கள் அறுவடை செய்யும் நிலைக்கு வந்த போது தக்காளியின் விலை மிகவும் சரிந்தது. கிலோ ரூ.3க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பல விளைநிலங்களில் தக்காளி பறிக்கப்படாமல் கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்காக விடப்பட்டன.
தற்போது தக்காளியின் விலை சற்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரச்சந்தை நிலவரத்தின்படி ஒரு கிலோ ரூ. 40 வரை விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், எதிர்வரும் வாரம் சந்தையின்போது இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.