செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பு வீடு - அவினாசியில் தேர்வான பயனாளிகளிடம் பங்களிப்பு தொகை பெறும் பணி தீவிரம்
அவிநாசி பேரூராட்சி சார்பில் கடந்த மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பேரூராட்சி மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவிநாசி:
அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. பயனாளிகள் தேர்வில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை கிளம்பியதால் கலெக்டர் நேரடியாக கவனம் செலுத்தினார்.
அவிநாசி பேரூராட்சி சார்பில் கடந்த மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பேரூராட்சி மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 920 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 825 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. விண்ணப்பதாரர்களின் நம்பக தன்மையை உறுதி செய்யும் பணியில் அவர்களின் வீடுகளுக்கே சென்று வி.ஏ.ஓ.,க்கள் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கலெக்டரால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினரால் 203 பயனாளிகள் இறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 43 பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்தவர்கள்.
அவர்களிடமிருந்து, அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகையான ரூ.82 ஆயிரம் காசோலை பெறும் பணியில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பயனாளிகளிடமிருந்தும் தொகை பெற்ற பின் விழா நடத்தி வீடுகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.