செய்திகள்
தற்கொலை

குடும்பத்தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு மெக்கானிக் தற்கொலை

Published On 2021-10-28 04:21 GMT   |   Update On 2021-10-28 04:21 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத்தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாத கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர் மகன் பாலா என்ற பாலசுப்பிரமணி (வயது 20). இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியின் தந்தை செல்போனை உடைத்து எறிந்தார். பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். வீட்டில் உள்ள மற்றவர்களும் நேற்று இரவு தூங்க சென்று விட்டனர்.

இதற்கிடையே நள்ளிரவில் பாலசுப்ரமணி, அருகில் உள்ள புளியந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு சென்று பாலசுப்பிரமணியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இறந்த பாலசுப்பிரமணியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பாலசுப்பிரமணியின் முகத்தில் தாடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததோடு துப்பாக்கியால் சுட்டது போல் இருந்தததால் அக்கம் பக்கத்தில் சென்றும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பாலசுப்பிரமணி இறந்து கிடந்த புளியந்தோப்பிற்கு சென்று பார்த்த போது அங்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று உடைந்தநிலையில் கிடந்தது. அதை கைப்பற்றி தொடர் விசாரணை நடத்திய போதுதான் பாலசுப்பிரமணி குடும்பத்தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அந்த துப்பாக்கி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருச்சியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களையும் சேகரித்துக்கொண்டனர். இதேபோல் உடைந்து கிடந்த நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இறந்த பாலசுப்ரமணியின் தந்தை செல்போனை உடைத்து எறிந்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டதால் அவருக்கு தகவல் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என இன்று காலை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

துப்பாக்கியால் வாலிபர் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News