நாங்குநேரியில் நள்ளிரவில் மினி லாரியில் கடத்திய 8 டன் ரேஷன் அரிசி சிக்கியது
நெல்லை:
நாங்குநேரி டோல் கேட்டில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. போலீசாரை கண்டதும் மினி லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.உடனே போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்தனர். டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். லாரியை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து போலீசார் லாரியையும், டிரைவரையும் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜசெல்வன் (வயது33) என்பது தெரியவந்தது.
மேலும் நெல்லையில் இருந்து குமரிக்கு 8 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். லாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.