செய்திகள்
தஞ்சையில் மருது சகோதரர்களின் படத்திற்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஓ.பி.எஸ் மனதில் பட்டதை துணிவாக கூறியுள்ளார்- டி.டி.வி.தினகரன்

Published On 2021-10-27 05:44 GMT   |   Update On 2021-10-27 06:39 GMT
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் தான் அ.ம.மு.க.வில் உள்ளதாகவும் அ.தி.மு.க.வை மீட்பதில் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என்றும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பூண்டியில் இன்று டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதையொட்டி தஞ்சையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மருது சகோதரர்களின் நினைவுநாளையொட்டி அப்பகுதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவர்களது படத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-



மருது சகோதரர்கள் வீரமும், விசுவாசமும் நிறைந்தவர்கள். சசிகலாவை
அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது சரியானது தான். அவர் எப்போதுமே நியாயமாகத்தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தை துணிந்து சொல்லியிருக்கிறார்.

அ.ம.மு.க. தொடங்கப்பட்டதே அ.தி.மு.க.வை மீட்பதற்கு தான். நாங்கள் சரியான திசையில் பயணிக்கிறோம். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி ஏற்பட நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் தான் அ.ம.மு.க.வில் உள்ளனர். அ.தி.மு.க.வை மீட்பதில் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் உற்சாக குரல் எழுப்பினர்.


Tags:    

Similar News