செய்திகள்
முத்தூரில் 55 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களைஅறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் காங்கேயம் வட்டம் சின்னமுத்தூர் கிராமத்திற்குட்பட்ட 55 பயனாளிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களைஅறிவித்து செயல்படுத்தி வருகிறார். பதவியேற்று 5 மாத காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டைஇல்லாமலும் பயணம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது என்றார். மேலும் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட முத்தூர் பேருந்து நிலையம், சாமி தோட்டம், மேட்டுக்கடை, தொட்டியபாளையம் வட்டாரகாடு, சாலையங்காட்டு பள்ளம், நகப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.