செய்திகள்
பட்டாசு கடை உரிமம் - விரைவாக வழங்க வியாபாரிகள் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற்று கடைகளை நடத்திட மாவட்ட வருவாய் அலுவலர் அதற்கான அனுமதி வழங்கி வருகிறார்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமங்களை விரைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து உடுமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற்று கடைகளை நடத்திட மாவட்ட வருவாய் அலுவலர் அதற்கான அனுமதி வழங்கி வருகிறார்.
இந்நிலையில் உடுமலையில் பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்னமும் உரிமம் கிடைக்கப்பெறவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் விரைவாக ஆய்வுகளை முடித்து உரிமம் வழங்க வேண்டும்.
அப்போதுதான் பாதுகாப்பான முறையிலும் அரசு வழிகாட்டுதலின்படியும் கடைகளை நடத்த ஏதுவாக இருக்கும்.
மிகவும் பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டிய தொழில் காலதாமதமாக செய்வதால் அவசர கதியில் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே பட்டாசு கடை உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.