செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி வழக்கை திசை திருப்பிய தனபால்

Published On 2021-10-26 06:58 GMT   |   Update On 2021-10-26 09:45 GMT
அ.தி.மு.க. பிரமுகரான தனபால் ஆரம்ப காலம் முதலே எடப்பாடி பகுதியில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார்.
சேலம்:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி அங்கு இரவு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டில் நுழைந்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்திரகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து அப்போதைய ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பாபு விபத்து வழக்கு என பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோவை மண்டல ஐ.ஜி. சுதாகரன், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவர் ஆத்தூர் அருகே உள்ள சக்தி நகரில் வசித்து வருகிறார். கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் ரமேஷ் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

விபத்தில் கனகராஜ் இறந்தது, கொடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்தது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதா? அல்லது திட்டமிட்டு நடந்த சதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த 2 வழக்குகள் குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் சிலரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். முக்கிய தகவல்கள் பெறப்பட்டு சாட்சிகள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.



இதனிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஊட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான 2 பேர் மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த பின்னர் கனகராஜ் தனது சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இருவரிடமும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான சில விவரங்களை கனகராஜ் சொல்லியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அ.தி.மு.க. பிரமுகரான தனபால் ஆரம்ப காலம் முதலே எடப்பாடி பகுதியில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வந்த தனபால் கனகராஜின் மரணத்துக்கு பின்னர் கனகராஜின் விபத்து வழக்கை காரணமாக வைத்து கொடநாடு வழக்கை திசை திருப்பவும், அது தொடர்பான சாட்சியங்களை கலைக்கவும் திட்டமிட்டு செயல்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கைதான தனபால், கனகராஜ் மரணம் மற்றும் கொடநாடு சம்பவங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி வந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். இதன் காரணமாகவே தனபால் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கைதான தனபால், ரமேஷ் இருவரிடமும் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


Tags:    

Similar News