செய்திகள்
திருப்பூர் ராதாநகரில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
சாலை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 21-வது வார்டு ராதா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.
இதனால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று பெய்த மழையால் அந்த பகுதி சாலை சேறும் சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை திடீரென சேறும் சகதியுமாக மாறிய சாலையை உடனே சரி செய்யக்கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சாலையை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.