கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு தேவையின்றி சுற்றியவர்களின் 137 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.05.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில் தமிழக அரசு 21.06.2021 காலை முதல் 31.10.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குதொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
அதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத்தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணித்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர் காவல் குழுவினர் நேற்று 23.10.2021 மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில் சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 137 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது 1,439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறி முறைகளை கடைபிடித்து கொரோனா நோய் தொற்றை தடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.