செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் 26-ந்தேதி ஆலோசனை

Published On 2021-10-24 04:04 GMT   |   Update On 2021-10-24 04:04 GMT
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் இப்போது பெய்த மழையால் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை வருகிற 26-ந்தேதி தொடங்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாறப்பட்டு வருகின்றன.

சென்னையில் மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி தலைமை செயலகத்தில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.



தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் இப்போது பெய்த மழையால் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக என்னென்ன முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


Tags:    

Similar News