செய்திகள்
குமாரபாளையம், எருமப்பட்டி பகுதியில் மது விற்ற 3 பேர் கைது
குமாரபாளையம், எருமப்பட்டி பகுதியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்துபவர்கள் பெருமாள் (வயது 52), ஷாஜகான் (29). இவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சில்லி சிக்கன் கடையில் சோதனையிட்டனர். அதில் 2 பேர் கடைகளிலும் தலா 50 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எருமப்பட்டி அருகே பவித்திரம் ஊராட்சியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மது விற்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு மது விற்ற பவித்திரம் ஊராட்சி வேளாளர் தெருவை சேர்ந்த செல்லதுரை (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.