செய்திகள்
முக ஸ்டாலின்

நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விற்பனை- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-10-23 09:16 GMT   |   Update On 2021-10-23 10:56 GMT
பனைத்தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியால் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை வெளியிட்டார்.

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி / மாநிலம் / நாட்டில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைகளின்படி உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், சந்தைப்படுத்துவதற்காகவும் அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக சட்டப்படி வழங்கப்படும் சான்றாகும்.

புவிசார் குறியீட்டின் மூலம் அப்பொருட்களுக்கான தரம், நற்பெயர் மற்றும் அடையாளம் காக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது. இதனால் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் தரம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அதன் தொன்மை பேணி பாதுகாக்கப்படுகிறது. புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றவைகளைத் தவிர பிறபகுதி / மாநிலம் / நாட்டில் உள்ளவர்கள் அப்பொருட்களை உற்பத்தி செய்யவோ, சந்தைப்படுத்தவோ சட்டப்படி இயலாது. இதன்மூலம் போலியாக உற்பத்தி செய்வதும் கள்ளச்சந்தையில் விற்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தின் தொடர்முயற்சியின் காரணமாக, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார்குறியீடு பதிவகம் மூலம் புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புவிசார் குறியீட்டின் மூலம் தமிழக கைவினைஞர்கள் படைப்புகள் உலகளவில் கொண்டுச் சென்று சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நவீனமும் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களை கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 100 புதிய வடிவமைப்புகள், ஆரணி பட்டு சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், திருபுவனம் பட்டு சேலைகள் 50 புதிய வடிவமைப்புகள், சேலம் - கோயம்புத்தூர் பட்டு சேலைகள் 200 புதிய வடிவமைப்புகள், சின்னாளப்பட்டி பட்டு / பருத்தி சேலைகள் 75 புதிய வடிவமைப்புகள், நெகமம் பருத்தி சேலைகள் 40 புதிய வடிவமைப்புகள், திண்டுக்கல் - பரமக்குடி பருத்தி சேலைகள் 80 புதிய வடிவமைப்புகள், லினன் சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், ஆடவருக்கான கைலிகள் 75 புதிய வடிவமைப்புகள், பவானி கோர்வை ஜமக்காளம் 30 புதிய வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை-சட்டை 50 புதிய வடிவமைப்புகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக “தமிழ்த்தறி”என்ற தொகுப்பினை முதல்-அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சரிகையில் உள்ள தங்கம் - வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையினை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சரிகை உத்தரவாத அட்டையினை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மென்மையான இயற்கை பருத்தி நூலினை உபயோகித்து பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை இரகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் புதிய முயற்சியாக இந்தாண்டு பெண்களைக் கவரும் வகையில் ஆதிரை கலெக்சன்ஸ் வகையான அச்சிடப்பட்ட பட்டு புடவைகள், டிஜிட்டல் பிரிண்டிங் பட்டுபுடவைகள், கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பட்டு புடவைகள், மற்றும் மெல்லிய ரக பருத்தி இழை புடவைகள் ஆகியவற்றையும் தமிழ்த்தறியின் ஒருபகுதியாக முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களை கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர சோப்புகளுக்கு இணையாக ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் எனும் 4 வகையான நறுமணங்களில் 125 கிராம் அளவுகளில் மக்கள் விரும்பும் வண்ணம் நவீன வடிவமைப்பிலான அட்டைப்பெட்டிகளில், வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்திப்பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் பச்சைத்தேன் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தேனீ விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பதப்படுத்தி அக்மார்க் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கதர் அங்காடிகளில் கடந்த பல ஆண்டுகளாக பெட் பாட்டில்களில் தேனை அடைத்து பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் அறிவுரைப்படி, கண்ணாடி பாட்டில்களில் தேனை அடைத்து விற்பனை செய்திடும்போது தேனின் பண்புகள் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்கப் பெறும் என்பதாலும், சந்தையில் பிரசித்திப்பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் காதி தேனை விற்பனை செய்யும் நோக்கிலும், நவீன கண்ணாடி பாட்டில்களில் பொதுமக்களை கவரும் வண்ணம் அழகிய லேபில் களை கொண்ட 250 கிராம் மற்றும் 500 கிராம் அளவுகளில் தேன் விற்பனையை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.



வணிகக் களத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சியினை கருத்தில் கொண்டு இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்திட இயக்க கைபேசி செயலியை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் “இராமநாதபுரம் - சிவகங்கை” மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்கு சொந்தமான இடத்தில், பனைத் தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.53.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையினைப் பிரித்து, தனியாக துணி நூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

புதிய மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்துதல் மற்றும் தற்போதைய சந்தையில் அதிக தேவையுள்ள பட்டு, கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசால் சிறந்த நெசவாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்ட 6 கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் பரிசாக 1 இலட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் முறையே பட்டு மற்றும் பருத்தி ஆகிய இரண்டு இரகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான பட்டு இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு கே.ஜி.கண்ணன், இரண்டாம் பரிசு வி.சரவணன், மூன்றாம் பரிசு கே.சுமதி, பருத்தி இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு இ.ஆர்.நாகலம்மாள், இரண்டாம் பரிசு திரு.எஸ்.ரவி, மூன்றாம் பரிசு திரு.என். நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு முதலமைச்சர் இன்று பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

கைத்தறி துணிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அயல்நாட்டு சந்தையில் கைத்தறி துணி விற்பனையினை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சிறந்த கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை திருவாளர் அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு ஈரோடு சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மூன்றாம் பரிசு ஈரோடு திருவாளர் ஃபைவ் பி வென்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் முதலமைச்சர் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவைப்படும் சரிகையினை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1974ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது . இந்நிறுவனம் தரச்சான்று பெற்ற, மாநில அரசு சார்ந்த ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைப்படும் 60 சதவீத சரிகையினை உற்பத்தி செய்து நியாயமான விலையில் விநியோகம் செய்து வருகின்றது.

தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஈவுத் தொகையான 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Tags:    

Similar News