செய்திகள்
திருப்பூரில் இன்று 6 - வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 3 லட்சத்து 84 ஆயிரத்து 081 நபர்களுக்கும், 2&வது தவணை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 551 பேருக்கும் செலுத்த வேண்டியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 5 கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த முகாம்கள் வாயிலாக 4 லட்சத்து 2 ஆயிரத்து 740 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி 19.95 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 16 லட்சத்து 11 ஆயிரத்து 219 பேர் முதல் தவணையும், 4 லட்சத்து 97 ஆயிரத்து 1 121 நபர்களுக்கு 2 - வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 3 லட்சத்து 84 ஆயிரத்து 081 நபர்களுக்கும், 2 - வது தவணை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 551 பேருக்கும் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் 6 - ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தில் 742 மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை 7 மணி வரை முகாம் நடக்கிறது.
இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மையங்களிலும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இன்று பணி நாள் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் காலையிலேயே மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இருப்பினும் சிலர் இன்னும் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களின் விவரத்தை அறிந்து சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். தடுப்பூசி மையங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.