செய்திகள்
பெட்ரோல் - டீசல்

டீசல் விலை உயர்வால் மீனவர்கள் கடும் பாதிப்பு

Published On 2021-10-23 05:04 GMT   |   Update On 2021-10-23 05:04 GMT
தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள தனியார் ஓட்டலில் வருகிற 25-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்க ஒருங்கிணைப்பாளர்கள் போஸ், தாஜுதீன், ஜேசுராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டீசல் விலை உயர்வால் மீனவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார பின்னடைவை சந்தித்து வாழ்வதா? சாவதா? என்ற கேள்விக்குரியாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த தொழில் நிலைக்குமா? நிலைக்காதா? இப்படியே உயர்த்தினால் நாம் எப்படி தொழில் செய்து மீள்வது? மேற்கொண்டு என்ன செய்வது? எதிர்காலத்தை எப்படி கொண்டு செல்வது? போன்றவற்றிற்கு தங்களுடைய மேலான ஆலோசனைகளை பெறவும், மத்திய அரசால் கொண்டு வரக்கூடிய மீனவருக்கு எதிரான சட்ட மசோதாவை நிறுத்த வழி வகைகளை காணவும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதால் இலங்கை அரசால் அடிக்கடி நமது தமிழக இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதும் கொலை செய்து கடலில் வீசுவதும், படகுகளை மோதி உடைத்து கடலில் மூழ்கடிப்பதும் அன்றாட நிகழ்வாக நடத்தி வருவதை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை- கண்டிப்பதில்லை.

மாறாக அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், அவர்களுக்கு வேண்டிய நிதி உதவிகளை அளித்து வருவதும் அன்றாடம் நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்களுக்கு ஏற்படுகிற எந்த பிரச்சினையையும் இவர்கள் இலங்கை அரசை அழைத்து கண்டிப்பதில்லை.

கொலை செய்யப்பட்டு வரும் அப்பாவி மீனவர்களை காப்பாற்றும் வகையில் இனி மேலாவது இதனை உடனடியாக இலங்கை மீது கண்டனம் தெரிவித்து தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுடன் அவர்களால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்கவும், இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டெடுத்து கொண்டு வரவும், நஷ்டமடைந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியும் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் மீனவர்கள் ஒன்று கூடி முடிவெடுக்க தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள தனியார் ஓட்டலில் வருகிற 25-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News