செய்திகள்
கோப்புபடம்

நடைபாதை கடைகள் அகற்றம் - திருப்பூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள்

Published On 2021-10-23 04:37 GMT   |   Update On 2021-10-23 04:37 GMT
சி.ஐ.டி.யு., சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், செயலாளர் பாலன் தலைமையில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட் சுற்றுப்பகுதியில் ஏராளமானோர் சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இது போன்ற நடைபாதை கடைகளால் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனால் கடைகள் அகற்றப்பட்டன. 

இந்தநிலையில் சி.ஐ.டி.யு., சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், செயலாளர் பாலன் தலைமையில் மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனுவில், பல்லடம் ரோடு உழவர் சந்தை பகுதியில் நீண்ட காலமாக நடைபாதை வியாபாரிகள் கடை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

தற்போது அக்கடைகள் அகற்றப்பட்டதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடைபாதை கடைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும். அதுவரை அவர்கள் அதே பகுதியில் கடை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News