செய்திகள்
கோப்புபடம்

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் சேவைகள் வீடியோவாக பதிவு

Published On 2021-10-23 03:59 GMT   |   Update On 2021-10-23 03:59 GMT
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் விபரத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் கோரியுள்ளது.
உடுமலை:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பு அடைவதை தடுக்க ‘ஆன்லைன்’ வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதேநேரம் பல ஆசிரியர்கள், புதுமையான கருத்துகளை எடுத்துரைத்தும் அதிகப்படியான பாட வீடியோ தயாரித்து ‘யூடியூப்’ பில் பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தனர். 

குறிப்பாக பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழிற்கல்வி பாடத்தை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்த்தல், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கற்றல் பணி தொடர வழிவகை செய்தல், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனர். 

அவ்வகையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் விபரத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் கோரியுள்ளது. அதன்படி மாவட்ட அளவில் ஆசிரியர்கள் தேர்வு முகாம் உடுமலை பார்க் ரோடு நகராட்சிப் பள்ளியில் நடந்தது. 

பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். இதில் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்ட பணி விபரங்களை சேகரித்தனர். 

பயிற்சி நிறுவனத்தார் கூறுகையில்: 

ஆசிரியர்கள் பலர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த விபரம் அவர்கள் வாயிலாக ‘வீடியோ’வாக பதிவு செய்யப்படும். அந்த தயாரிப்பு சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர். 
Tags:    

Similar News