செய்திகள்
வாடகை கட்டணம் வழங்காததை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கார்களை ஒப்படைத்த டிரைவர்கள்
தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வாடகை தொகையை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்கவில்லை.
திருப்பூர்:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரசு பயன்பாட்டிற்காக பல்வேறு வாடகை கார்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த சுமார் 57 வாடகை கார் கள் அரசு சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் அந்தந்த கார்களுக்கான வாடகை தொகை முழுவதும் ஒப்படைக்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் வாடகை கார்களை இயக்க உரிமை யாளர்கள் சம்மதித்து இயக்கினர்.
ஆனால் தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வாடகை தொகையை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்கவில்லை. அவிநாசி தாலுகாவில் மட்டும் 50 காருக்கும் சேர்த்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் வாடகை தொகை நிலுவையில் உள்ளதாக கார் உரிமையாளர்கள் கூறுகின்றனர் .
மேலும் கொரோனா கால கட்டம் என்பதால் சுற்றுலாவிற்கான வாடகைக்கார் பயன்பாடு குறைந்துள்ளதால், தற்போது கார்களை பராமரிப்பதற்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக டிரைவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
எனவே சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய கார்களுக்கான வாடகை தொகையை எப்போது அரசு சார்பில் தருகிறார்களோ? அப்போது கார்களை எடுத்துக் கொள்வதாக கூறி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று டிரைவர்கள் கார்களை ஒப்படைத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.