செய்திகள்
ராஜா செந்தூர் பாண்டியன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி: சிவில் கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது நடவடிக்கை எடுக்க முடியாது- ராஜா செந்தூர் பாண்டியன்

Published On 2021-10-21 09:31 GMT   |   Update On 2021-10-21 09:31 GMT
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்தபோது தனது காரில் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதற்காக அப்போதே அ.தி.மு.க. ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான வழக்கு சிவில் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது போலீசில் எப்படி புகார் அளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த 12.9.2017 அன்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரிதான் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி போடப்பட்ட இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் உரிய பதில் அளிக்குமாறு சிவில் கோர்ட்டும் எதிர்தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளது.

இப்படி சிவில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதுதொடர்பாக போலீசில் எந்த புகாரையும் அளிக்க முடியாது. ஒருவேளை புகார் அளித்தாலும் அதில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்தபோது தனது காரில் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதற்காக அப்போதே அ.தி.மு.க. ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுபோன்று தான் தற்போது அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News