செய்திகள்
கிளை வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் செல்லும் காட்சி.

பல்லடம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி

Published On 2021-10-21 07:51 GMT   |   Update On 2021-10-21 07:51 GMT
கடந்த சில வருடங்களாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வந்து சேராத நிலை இருந்தது.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி பண்ணாரி அம்மன் நகரில், பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டிக் கிடந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து கிளை வாய்க்காலை தூர் வாரினர்.

நான்காம் மண்டல பி.ஏ.பி.பாசன நீர் இன்னும் சில தினங்களில் இந்த கிளை வாய்க்காலில் வரும் நிலையில் அந்த வாய்க்காலில், சாக்கடை கழிவுநீர் வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:

பல்லடம் அருகே உள்ள உகாயனூர் பிரிவிலிருந்து பி.ஏ.பி.பாசன மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அல்லாளபுரம், காளி, நாதம்பாளையம், அவரப்பாளையம் வழியாக நொச்சிபாளையம் கிராமங்களிலுள்ள கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும் வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வந்து சேராத நிலை இருந்தது. இதுகுறித்து பலமுறை பி.ஏ.பி.பாசனத் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லாததால் விவசாயிகள் நிலத்தடி நீர், லாரி தண்ணீர் போன்றவற்றை வாங்கி விவசாயம் பார்த்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.ஏ.பி. பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பி.ஏ.பி.பாசன தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து கிளை வாய்க்கால்களை, தூர்வாரி சுத்தம் செய்ததோம். 

தற்போது பாசனத்தண்ணீரை எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஆங்காங்கே ஆக்கிரமித்திருந்த வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் வந்ததால் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளோம்.

எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை தடுத்து, பி.ஏ.பி. பாசன  தண்ணீரை கிளை வாய்க்கால்களில் வருமாறு ஏற்பாடு வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News