செய்திகள்
கொள்ளை

திருமங்கலம் அருகே மத்திய பாதுகாப்பு படை தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2021-10-20 10:43 GMT   |   Update On 2021-10-20 10:43 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மத்திய பாதுகாப்பு படை தம்பதி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது33). இவரது மனைவி ராக்கு. இவர்கள் 2 பேரும் ஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்களாக பணியாற்றி வருகின்றனர்.

மேலகோட்டையில் உள்ள ராம்குமார் வீடு அருகே அவருடைய தந்தை நாகராஜ் வீடும் உள்ளது. இந்த நிலையில் நேற்று ராம்குமார் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் நாகராஜிக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. எனவே வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராம்குமாரின் தாயார் இந்திரா திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 ஆயிரத்து 500 கொள்ளைபோய் இருப்பதாக நாகராஜ் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை பதிவு செய்தனர்.
Tags:    

Similar News