செய்திகள்
விபத்து

ரெயில் மோதி நகை கடை ஊழியர் உயிரிழப்பு

Published On 2021-10-20 10:32 GMT   |   Update On 2021-10-20 10:32 GMT
ரெயில் மோதி நகை கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் பெரியகுப்பம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கஜபதி. இவரது மகன் சரவணன் (வயது 36). இவர் அரக்கோணத்தில் உள்ள பிரபல நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் வேலையின் காரணமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News