செய்திகள்
சென்னை ஐகோர்ட்

உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா?- போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Published On 2021-10-20 10:12 GMT   |   Update On 2021-10-20 10:12 GMT
உயர் அதிகாரிகளே குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கூடுதல் டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு டி.கண்ணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, கண்ணன் தரப்பில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மீதான வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.


Tags:    

Similar News