செய்திகள்
மலைத்தேன் உற்பத்தியை அதிகரிக்க பழங்குடியின மக்கள் கோரிக்கை
நவீன முறையிலான விவசாயம், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாடு போன்ற காரணங்களால் தேனீக்களின் இனம் அழிந்து வருகிறது.
உடுமலை:
உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை உள்ளடக்கி அமைந்துள்ளது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் ஓங்கி உயர்ந்த சோலைக் காடுகள் போன்றவற்றால் தேன் உற்பத்தி சிறந்து விளங்குகிறது.
இங்குள்ள மலைப்பகுதிகளில் பாறை இடுக்குகள் மற்றும் பெரிய மரக்கிளைகளில் மலைத்தேன் கூடுகளை ஆங்காங்கே காண முடிகிறது. வனங்கள் மற்றும் வனம் ஒட்டிய கிராமப் புறங்களில் அதிகப்படியான மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இவை அனைத்தும் ஒரு ஆண்டில் வெவ்வேறு தருணங்களில் பூக்கள் பூக்கின்றன.
அவ்வகை பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேன் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் அமைகிறது. ஆனால் நவீன முறையிலான விவசாயம், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாடு போன்ற காரணங்களால் தேனீக்களின் இனம் அழிந்து வருகிறது. இதனால் மலைப் பகுதியிலும், உயர்ந்த மரங்களிலும் பரவலாக காணப்பட்ட தேன் கூடுகள் சற்று குறைந்துள்ளது.
இது தவிர அடுக்குத்தேன், கொசுந்தேன், கொம்புத்தேன் உற்பத்தியும் குறைந்துள்ளதால் தேன் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பழங்குடியின மக்கள் பாதிப்படைகின்றனர்.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:
சித்த மருத்துவத்தில் துணை மருந்தாக தேன் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான தேன் பல ஆண்டுகள் கடந்தாலும் கெடாது. இதில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
தேன் உற்பத்தியை பெருக்கி செட்டில்மென்ட் உள்ள பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்றனர்.