செய்திகள்
உடுமலையில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப முகக்கவசம், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்டத்தில் 93 துவக்கப்பள்ளிகள், 25 நடுநிலைப்பள்ளிகளில் அடுத்த மாதம் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இப்பணிகள் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப முகக்கவசம், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மேலாண்மை நிதியில் முதற்கட்டமாக ரூ.37,500, ‘சேப்டி அண்ட் செக்யூரிட்டி’ என ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 4 ஆயிரம் ரூபாயை மட்டும் பயன்படுத்தி முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் வருகையையொட்டி வகுப்பறைகள், தளவாடப்பொருட்குள், தலைமையாசிரியர் அறை, சமையலறை, கழிவறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. முகக்கவசம் அணியாத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு முகக்கவசம் அளித்து அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.