செய்திகள்
100 நாள் வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
மாநாட்டில் திருப்பூரில் இருந்து தாலுகா தலைநகரமான மடத்துக்குளத்திற்கு நேரடியான பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநாடு நடந்தது. இதில் மடத்துக்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் நியமிக்கப்பட வேண்டும்.
இதோடு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். சென்னை செல்லும் ரெயில் மடத்துக்குளத்தில் நின்று செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நால்ரோடு பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க சிக்னல் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும்.
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை, பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாவட்ட தலைநகரமான திருப்பூரில் இருந்து தாலுகா தலைநகரமான மடத்துக்குளத்திற்கு நேரடியான பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் ஏற்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.