நண்பருக்கு ஆதரவாக பரிந்து பேசியதால் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு- 3 பேர் கைது
மதுரை:
மதுரை ஹார்விபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கேசவன் (வயது 18). இவரும், இந்திராநகர் வெங்கடேஷ் மகன் நாகராஜ் (19) என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.
கேசவனின் மற்றொரு நண்பரான பொண்ணு பாண்டியை சரஸ்வதி நகர் ஆக்னஸ் மணி சரமாரியாக அடித்து உதைத்தார்.
இது தொடர்பாக நண்பருக்கு ஆதரவாக கேசவன் மற்றும் நாகராஜன் செல்போனில் ஆக்னஸ் மணியை தட்டிக் கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆக்னஸ் மணி, சகோதரர் கவுதம் மற்றும் பைகாரா ஆனந்த் ஆகியோருடன் நேற்று இரவு ஹார்விபட்டி பூங்கா பகுதிக்கு வந்தனர்.
அப்போது அங்கு கேசவன், நாகராஜன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை ஆக்னஸ் மணி கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ராஜேந்திரன் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆக்னஸ் மணி, கவுதம், ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.