செய்திகள்
தமிழக அரசு

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியீடு

Published On 2021-10-18 08:27 GMT   |   Update On 2021-10-18 08:27 GMT
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டப்பேரவையில்   110-வது விதியின் கீழ், அரசு ஊழியர்களின் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் எனவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.


அதன் படி, பணிக்காலமாக முறைப்படுத்துவதற்கான ஆணையை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.

அதில், 2016, 17 மற்றும் 19-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போராட்டத்தின் காரணமாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News